செய்திகள்

சேலத்தில் திருமணம் ஆன 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ.விசாரணை

Published On 2016-10-16 14:08 GMT   |   Update On 2016-10-16 14:08 GMT
சேலத்தில் திருமணம் ஆன 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொண்டலாம்பட்டி:

சேலம், குகையை அடுத்த கருங்கல்பட்டியில் உள்ள பாண்டுரங்கன்கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 30) இவர் அந்த பகுதியில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் துணிகளை தரம் பிரிக்கும் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சசி என்கிற சசிகலா (20). இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று 5 மாதங்கள் ஆகிறது.

இந்த நிலையில், திருமணம் ஆனது முதல் கணவன், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சசிகலா நேற்று மாலையில் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், உதவி கமி‌ஷனர் ரவீந்திரன் மற்றும் செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் ஆகி 5 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் சசிகலா தற்கொலை செய்துள்ளதால் சேலம் ஆர்.டி.ஓ.விஜய்பாபு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News