செய்திகள்

முதலமைச்சர் நலம்பெற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சிறப்பு பிரார்த்தனை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஏற்பாடு

Published On 2016-10-14 11:47 GMT   |   Update On 2016-10-14 11:54 GMT
முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர் விரைவில் நலம்பெற வேண்டி தொண்டர்கள் பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.

பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து முதலமைச்சரின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து செல்கின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பள்ளி மாணவிகளுடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகுமார், பசும்பொன் மக்கள் கழக நிறுவனத் தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமீம் மரைக்காயர் மற்றும் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில பொருளாளர் முகமது அலி, மாணவரணி பகுதி செயலாளர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News