செய்திகள்

திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2016-09-18 16:14 GMT   |   Update On 2016-09-18 16:14 GMT
திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள மாத்தார் அருவிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகன்  விஷ்ணு (வயது 17). இவர் மார்த்தாண்டத்தில்  உள்ள ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.  நேற்று இரவு இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். கல்லடிமாமூடு பகுதியில் சென்றபோது குலசேகரத்தில் இருந்து குளச்சல் நோக்கி ஒரு அரசு பஸ் எதிரே வந்தது.

விஷ்ணு தனக்கு முன்னால் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷ்ணுவின் மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் விஷ்ணு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ராஜனை கைது செய்தனர். ராஜன் திருவிதாங்கோடு அமராவதி தெருவைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே நேற்று மாலை சொகுசு கார் ஒன்று பெண் மீது மோதி அவர் பலியானார். இதனால் திருவட்டார் பகுதியில் பரபரப்பாக இருந்த நேரத்தில் வாலிபர் விஷ்ணு பஸ் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News