கிணற்றில் மூழ்கி சென்னை-காஞ்சீபுரம் மாணவர்கள் பலி
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை, ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ஜெகன் (17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் மகன் தயாநந்தன் (19). சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜெகன், தயாநிதி, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் விஷ்ணு (17), முருகுதமிழ் (19) ஆகிய 4 பேரும் ஓரிக்கை அடுத்த குருவிமலை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குளிக்க சைக்கிளில் சென்றனர்.
கிணற்று படிக்கட்டுகளை பிடித்து குளித்துக் கொண்டிருந்த ஜெகன், தயாநந்தன் இருவரும் திடீரென தண்ணீ ரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இதைபார்த்த மற்ற இரண்டு நண்பர்களும் இவர்களை பார்த்து காப்பாற்ற முடியாமல் பயந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர். நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. நண்பர்கள் பயம் காரணமாக வீட்டில் சொல்லாமல் இருந்து விட்டனர். இந்நிலையில் வெகுநேர மாகியும் வீடு திரும்பாமல் இருந்த ஜெகன் மற்றும் தயாநந்தன் ஆகியோரின் பெற்றோர்கள் பல இடங்களில் தங்களின் மகன்களை தேடினர். அவர்கள் கிடைக்காததால் நண்பர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். இதை கேட்டு அலறியடித்து கொண்டு ரவி, மற்றும் தங்கபாண்டியன் இருவருடனும் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் 2 மணிநேரம் போராடி ஜெகன், தயாநந்தன் உடல்களை மீட்டனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களின் உடல்களை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.