செய்திகள்

அம்மாபேட்டை அருகே எலக்ட்ரிக் கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

Published On 2016-08-25 17:24 IST   |   Update On 2016-08-25 17:24:00 IST
எலக்ட்ரிக் கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது குறித்து இடத்தின் உரிமையாளர் மீது பெண் புகார் தெரிவித்துள்ளார்.

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் அம்மாபேட்டையை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடை இடத்தின் உரிமையாளர் ஊஞ்சப்பாளையம் கருங்கல் தோட்டத்தை சேர்ந்த அப்புசாமி ஆவார்.

கடைக்கு மாத வாடகையாக அப்புசாமி ரூ.2 ஆயிரம் வசூலித்து வந்தார். இது தொடர்பாக இவருக்கும் கடை வைத்து நடத்தும் ஜெயலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

வாடகை பணம் தராவிட்டால் கடையை காலி செய்யுங்கள்... என்று அப்புசாமி கூறினாராம்.

இது தொடர்பாக பவானி கோர்ட்டில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று கடையின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து ஜெயலட்சுமி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் அப்புசாமியும் அவரது ஆட்களும் முன் விரோதம் காரணமாக தனது கடையை உடைத்து கொள்ளையடித்து உள்ளனர். என்று கூறி உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அப்புசாமி மற்றும் பூதப்பாடியை சேர்ந்த முனியப்பன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News