செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட லாரியை மிரட்டி கடத்திய உரிமையாளர்: தனிப்படை போலீசார் மீண்டும் பிடித்தனர்

Published On 2016-08-23 18:02 IST   |   Update On 2016-08-23 18:02:00 IST
கொடுமுடி அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை கடத்தி சென்ற உரிமையாளரிடம் இருந்து தனிப்படை போலீசார் மீண்டும் பறிமுதல் செய்தனர்.
கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் அடுத்த ஒத்தக்கடையில் கடந்த 12-ந் தேதி ஈரோடு மாவட்ட உதவி புவியாளர் ரமேஷ்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது கரூர் மாவட்டம் அத்திபாளையத்தில் இருந்து வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதை டிரைவர் ஜெகநாதன் ஓட்டி வந்தார். சோதனையில் அந்த லாரியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையொட்டி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அந்த லாரி கொடுமுடி தாலுகா அலுவலகம் முன் நிறுத்தப்பட்டது. அதன் சாவி, ஆவணங்கள் ஆகியவற்றை அங்கு பணியில் இருந்த காவலாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்று நள்ளிரவு 12 மணி அளவில் லாரி உரிமையாளர் அன்பழகன் மற்றும் டிரைவர் ஜெகநாதனும் அங்கு வந்தனர். அவர்கள் கள்ளச்சாவி போட்டு லாரியை எடுத்தனர். இதை கண்ட காவலாளி அதை தடுத்தார். ஆனால் அவர்கள் ‘‘லாரியை ஏற்றி உன்னை கொன்று விடுவோம்’’ என மிரட்டி விட்டு லாரியை எடுத்து சென்றுவிட்டனர்.

இது குறித்து 13-ந் தேதி தாசில்தார் கோவிந்தராஜ் கொடுமுடி போலீசில் புகார் செய்தார். கடத்தப்பட்ட லாரியை மீட்க இன்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதேஸ்வரன், ரவி, ஆறுமுகம், சமாதான பிரபு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் கரூர்-சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் கடத்தப்பட்ட லாரியை மற்ற லாரிகளின் மத்தியில் நிருத்தப்பட்டிருப்பதை கண்டனர். பிறகு அதை மீண்டும் தனிப்படையினர் பறிமுதல் செய்து கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக லாரி உரிமையாளர் அன்பழகன், டிரைவர் ஜெகநாதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News