மின்னல் தாக்கி 22 ஆடுகள் பலி: நிவாரண தொகை வழங்க வேண்டும் விவசாயி உருக்கமான பேட்டி
நம்பியூர் பகுதியிலும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. நம்பியூர் அடுத்த ஓணாண் குட்டை பகுதியில் அப்பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் மற்றும் சென்னியம்மாள் ஆகியோரின் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது மழை வெள்ளத்தில் ஆடுகள் தென்னை மரங்களுக்கு அடியில் ஒதுங்கியது. அப்போது ஒரு தென்னை மரத்தில் இடி விழுந்தது. இதில் மரத்தின் அடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்த ஆடுகளையும் இடி தாக்கியது.
இதில் முருகேசனுக்கு சொந்தமான 18 ஆடுகளும், சென்னியம்மாளுக்கு சொந்தமான 4 ஆடுகளும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டன.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கால்நடை டாக்டர் வந்து பிரேத பரிசோதனை செய்தார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம், நிலவருவாய் அலுவலர் லோகேஸ்வரன் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர். அவர்கள் இதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
ஆடுகளை பறிகொடுத்த விவசாயி முருகேசன் கண்ணீர் விட்டு அழுதார்.
‘‘நான் பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வந்தேன். இப்படி திடீர் இழப்பு வரும் என நான் நினைத்து கூட பார்ககவில்லை. இறந்த எனது ஆடுகளுக்கு இயற்கை இடர்பாட்டில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என கூறினார்.