செய்திகள்

அச்சிறுப்பாக்கம் பள்ளியில் படித்த 55 இலங்கை மாணவர்கள் நீக்கம்

Published On 2016-08-20 14:42 IST   |   Update On 2016-08-20 14:42:00 IST
அச்சிறுப்பாக்கம் பள்ளியில் படித்த 55 இலங்கை மாணவர்களை முறையான ஆவணம் இல்லாததால் நீக்கம் செய்து தலைமையாசிரியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுராந்தகம்:

இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் பிரைட் தொண்டு நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இலங்கை அகதிகளின் குழந்தைகளை தங்க வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகள், பெங்களூரில் உள்ள அகதிகளின் குழந்தைகள் இலங்கையில் தாய்-தந்தையர்களை இழந்த குழந்தைகள் என 6 வயது முதல் 20 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர் மொத்தம் 55 பேர் தங்கி இருந்தனர்.

இவர்கள் அச்சிறுப்பாக்கம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு படித்து வந்தனர்.

இந்த 55 மாணவ-மாணவிகளின் பள்ளி தஸ்தாவேஜு களில் குடியுரிமைக்கான ஆதாரங்கள் இல்லாமல் இருந்ததை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர்.

இதையொட்டி அவர்கள் 55 பேர்களையும் பள்ளியில் இருந்து நீக்கி வைத்துள்ளனர். முறையான ஆவணம் இல்லாததால் நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர். இனிமேல் போதிய ஆதாரங்கள் இல்லாமல் மாணவர்களை இனிமேல் சேர்க்கமாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.

இதுபற்றி தகவலறிந்த உளவுப்பிரிவு, கியூ பிரிவு போலீசார் அச்சிறுப்பாக்கத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரைட் தொண்டு நிறுவன மானேஜர் பேரின்ப நாயகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. இங்கு மாணவ-மாணவிகள் பாதுகாப்புக்கு இலங்கையை சேர்ந்த 4 பேர் தங்கி இருந்தனர். அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரைட் தொண்டு நிறுவனம் எந்த அடிப்படையில் இலங்கை அகதிகளின் குழந்தைகளை தங்க வைத்திருந்தது. இதற்கு அரசு அனுமதி பெற்றிருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

Similar News