செய்திகள்

வியாசர்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்தது - டிரைவர் பலி

Published On 2016-08-18 10:15 GMT   |   Update On 2016-08-18 10:15 GMT
வியாசர்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பூர்:

மாதவரத்தில் இருந்து பிராட்வேக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் காலி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. டிரைவர் மாதவரம், மஞ்சம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 45) வண்டியை ஓட்டினார்.

வியாசர்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

மோதிய வேகத்தில் லாரியின் 4 சக்கரங்களும் தனியாக உடைந்து கழன்று ஓடியது. லாரியின் கீழ் சிக்கிய டிரைவர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் லாரியின் சக்கரம் கழன்று ஓடியபோது மற்ற வாகனங்கள் அங்கு வரவில்லை. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News