செய்திகள்
கோர்ட்டில் ஆஜராக வந்தவர்களை படத்தில் காணலாம்.

சாலை மறியல் வழக்கு: ஒரே கிராமத்தை சேர்ந்த 116 பேர் கோர்ட்டில் ஆஜர்

Published On 2016-08-07 14:58 IST   |   Update On 2016-08-07 14:58:00 IST
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் ஒரே கிராமத்தை சேர்ந்த 116 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை கிராமத்தில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கொழை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், அதிகாரிகளை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி ஸ்ரீமுஷ்ணம்-சேத்தியாத்தோப்பு நெடுஞ்சாலையில் நாச்சியார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சாலை கொழை கிராமத்தை சேர்ந்த 53 பெண்கள் உள்பட 116 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விருத்தாசலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது கொழை கிராமத்தை சேர்ந்த 116 பேரும் மாஜிஸ்திரேட்டு அறிவு முன்னிலையில் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அறிவு, விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போது 116 பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார்.

Similar News