செய்திகள்

அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுஇடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Published On 2016-08-02 12:09 IST   |   Update On 2016-08-02 12:09:00 IST
அரசியல் கட்சி பிரமுகர்கள் யாராக இருந்தாலும் பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சிதம்பரம்:

தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சி பிரமுகர்கள் யாராக இருந்தாலும் பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். சசிகலா புஷ்பா எம்.பி. விவகாரம் அருவருக்கத்தக்கது. பொதுஇடத்தில் ஆண் நபரின் கன்னத்தில் அறைந்தது தவறு. ஆண், பெண் யாராக இருந்தாலும் பொதுஇடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்துகிறது.

சசிகலா புஷ்பா அவரது கட்சியைப் பற்றி குறை கூறுவது. உள்கட்சி விவகாரம் ஆகும். கட்சி தலைமை தான் அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது.

சசிகலா புஷ்பா பாராளுமன்றத்தில் பேசிய கருத்தின் உள்நோக்கம் தெரியாமல் அதுபற்றி கருத்துக்கூற இயலாது. அவர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டால் கண்டிப்பாக அவருக்கு பாதுகாப்பு கொடுப்பது பற்றி பாரதிய ஜனதா அரசு முடிவு செய்யும்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது பற்றி பாரதிய ஜனதா பயிற்சியாளர் பயிற்சி முகாம் 234 சட்டசபை தொகுதிகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற சட்டசபை தொகுதிகளிலும் இந்த பயிற்சி முகாம் நடைபெறும்.

இதில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு ஆற்றிய செயல்பாடுகள் குறித்தும் விளக்கமாக பயிற்சி அளிக்கப்படும். இந்த குருபெயர்ச்சி மற்றும் அனைத்து பெயர்ச்சிகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சிறப்பாக இருக்கும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை வரவேற்கிறேன்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Similar News