செய்திகள்

தேர்தல் விதிமீறல் வழக்கு: ராமதாஸ் மீதான விசாரணை 29-ந் தேதிக்கு தள்ளி வைப்பு

Published On 2016-07-25 15:23 IST   |   Update On 2016-07-25 15:23:00 IST
தேர்தல் விதிமீறல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பண்ருட்டி:

கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பண்ருட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நடிகர் நெப்போலியன் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 18-ந்தேதி டாக்டர் ராமதாஸ் ஆஜரானார். நீதிபதி சரவணபாபு வழக்கை விசாரித்தார். வருகிற 25-ந் தேதிக்கு (இன்று) வழக்கு விசாரணையை தள்ளி வைத்து அன்றைய தினம் டாக்டர் ராமதாஸ் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. டாக்டர் ராமதாஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல் ராஜாராம் ஆஜரானார். ராமதாஸ் ஆஜாராகாததற்கான காரணம் குறித்து அவர் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி சரவணபாபு ஏற்றுக்கொண்டார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Similar News