கடலூரில் மின் கம்பம் மீது மோதிய பஸ்: 50 பயணிகள் உயிர் தப்பினர்
கடலூர்:
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை விருத்தாசலத்திற்கு அரசு பஸ் 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பஸ்சை சித்திரைச்செல்வன் ஓட்டினார். பஸ் கடலூர் முதுநகர் பச்சாங்குப்பம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே மற்றொரு அரசு பஸ் வந்தது.
எதிரே வந்த பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக சித்திரை செல்வன் பிரேக் பிடித்து திருப்பினார். அப்போது பஸ் எதிர்பாராதவிதமாக அவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பம் மீது மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த பெண் போலீஸ் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது.
மின் கம்பத்தின் மீது பஸ் மோதியதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 50 பயணிகளும் உயிர் தப்பினர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.