செய்திகள்

தாம்பரம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் கொள்ளை

Published On 2016-07-24 13:01 IST   |   Update On 2016-07-24 13:01:00 IST
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சத்தியவாணி தெருவில் வசித்து வருபவர் கஜேந்திரன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தற்போது வெல்டிங் பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார்.

நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெரியபாளையம் கோவிலுக்கு சென்றார். இன்று அதிகாலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரொக்கம் ரூ.15 ஆயிரம், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை.

கஜேந்திரன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து பீர்க்கண்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News