100 பவுன் நகை மோசடி: அடகுகடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
கடலூர்:
கடலூர் செம்மண்டலத்தில் அபய்குமார் என்பவர் அடகுகடை நடத்தி வந்தார். இவரது கடையில் செம்மண்டலம் மற்றும் அதை சுற்றியுள்ள 250–க்கும் மேற்பட்டவர்கள் நகை அடகு வைத்தார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வட்டிக்கடை செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அபய்குமாரை திடீரென்று காணவில்லை. அடகுகடை தொடர்ந்து பூட்டிக்கிடந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தனர்.
அபய்குமார் நடத்திவந்த அடகுகடையில் 100 பவுனுக்குமேல் அடகு வைத் திருந்தோம். திடீரென்று அவரை காணவில்லை. அவர் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அபய்குமாரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அபயக்குமாருக்கு கடையை வாடகைக்கு கொடுத்தவர் இன்று காலை அந்த கடைக்கு வந்தார். கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றார். இதையறிந்த செம்மண்டலத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அங்கு திரண்டு வந்தனர். அடகுக்கடையை முற்றுகையிட்டனர்.
நகைமோசடி தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளோம். இந்தநிலையில் எப்படி கடையை திறக்கலாம் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் புதுநகர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தலைமறைவாகிவிட்ட அடகு கடைக்காரரை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
மேலும் அடகுக்கடையை திறக்க முயன்றவரிடம் நகை மோசடி தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு இருக்கும்போது கடையை திறக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத் தனர்.
பின்னர் பொதுமக்கள் அங்கிருந்த கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.