செய்திகள்

அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவர் கொலையில் 5 பேர் கைது

Published On 2016-07-17 08:28 IST   |   Update On 2016-07-17 08:28:00 IST
அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவரான தி.மு.க.வை சேர்ந்த சீனிவாசன் கொலை வழக்கில் நேற்று பா.ஜனதாவை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அச்சரப்பாக்கம்:

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவர் சீனிவாசன் (வயது 45). தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த வியாழக்கிழமை கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வரும்போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம கும்பலை அச்சரப்பாக்கம் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் பா.ஜனதா மாவட்ட ஆதிதிராவிட அணி தலைவர் திருமுகாட்டை சேர்ந்த பெருமாள் (45), அச்சரப்பாக்கம் பா.ஜனதா நகர தலைவர் பாலாஜி (50) மற்றும் பாரதீய ஜனதாவை சேர்ந்த படாளம் கார்த்திகேயன் (31), மணப்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் என்ற குணா (21), நாகராஜ் (25) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

பேரூராட்சி துணை தலைவர் கொலையில் தொடர்புடைய 7 பேரில் போலீசார் 5 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மறைமலைநகரை சேர்ந்த முரளி, பல கொலை வழக்கில் தொடர்புடைய தாம்பரத்தை சேர்ந்த சீனி என்ற சீனிவாசன் ஆகியோரை போலீசார் தேடிவருகிறார்கள்.

கைதான பா.ஜ. நிர்வாகிகளான பெருமாள், பாலாஜி ஆகியோர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணை தலைவரான தி.மு.க.வை சேர்ந்த சீனிவாசன் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் அவர் அச்சரப்பாக்கம் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்று வந்தார். அவர் இருந்தால் எங்களது கட்சியான பா.ஜனதா கட்சி அந்த பகுதியில் வளரமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அச்சரப்பாக்கம் மலை மீது உள்ள கோவிலில் பூசாரியாக இருந்த பாலாஜியை நீக்கி விட்டு வேறு ஒருவரை பூசாரியாக நியமித்து பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்தார்.

எங்கள் கட்சியை வளர விடாமல் தடுத்து வந்த அவர் எங்களது தொழிலிலும் குறுக்கிட்டு வந்ததாலும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அவரே வெற்றி பெறும் நிலையில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பதாலும் அவரை திட்டமிட்டு கொலை செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

கைதான 5 பேரையும் போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News