செய்திகள்

அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர் கொலையில் 5 பேர் சிக்கினர்

Published On 2016-07-16 11:55 IST   |   Update On 2016-07-16 11:55:00 IST
அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர் கொலையில் 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுராந்தகம்:

அச்சரப்பாக்கம், மேற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது45).

அச்சரப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருந்தார்.

நேற்று முன்தினம் அவர் அச்சரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக அச்சரப்பாக்கத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளது. போலீசிலில் சிக்கி உள்ளவர்களில் 3 பேர் அரசியல் கட்சி பிரமுகர்கள் என்று தெரிகிறது. தொழில் போட்டியில் சீனிவாசன் கொலை செய்யப்பட்டு உள்ளது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சீனிவாசன் கொலை தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன என்றார்.

Similar News