செய்திகள்

ஈரோட்டில் கெமிக்கல் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

Published On 2016-06-27 17:53 IST   |   Update On 2016-06-27 17:53:00 IST
ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டு மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் இப்போது மாம்பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பலர் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அதிகாரி கருணாநிதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் பூபாலன், சுகாதார ஆய்வாளர் நல்லசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகன், முத்து கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

நேதாஜி மார்க்கெட்டில் உள்ள மொத்தம் 5 குடோன்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு எத்தனால் கெமிக்கல் மூலம் மாம்பழங்கள் தவறான முறையில் பழுக்க வைக்கப்பட்டது தெரிய வந்தது. இப்படி எத்தனால் கெமிக்கல் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழங்களை அதிகாரிக்ள பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம்.

ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டு மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கருணாநிதி கூறும்போது, ‘‘மாம்பழங்களை பழுக்க வைக்க சில வழிமுறைகள் உள்ளன. ஆனால் சிலர் ‘ஸ்பிரே’ அடித்து பழுக்க வைக்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. ஸ்பிரே அடித்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி, அல்சர் போன்ற நோய்கள் வரும்’’ என்று கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் மாம்பழங்களையும் அதிகாரிகள் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அழித்தனர்.

மேலும் அவர் கூறும்போது, இதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை மாநகராட்சி அதிகாரிகள் அழித்து விடுவார்கள். இப்படி தவறான முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.

ஆய்வு செய்த பிறகு வெளியே வந்தபோது, அங்கு 2 டீ கடைகளில் பலகாரங்களை திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்ததை கண்ட அலுவலர் கருணாநிதி அந்த கடைகாரர்களுக்கு அறிவுரை கூறினார்.

இப்படி திறந்த வெளியில் பலகாரங்களை விற்க கூடாது. கண்ணாடி பேழைக்குள் பலகாரங்களை வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

Similar News