செய்திகள்
ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் எடுத்த படம்.

வக்கீல்கள் சட்டதிருத்தத்தை ரத்து செய்யும் வரை கோர்ட்டு புறக்கணிப்பு தொடரும்: வக்கீல்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

Published On 2016-06-12 08:28 IST   |   Update On 2016-06-12 08:28:00 IST
வக்கீல்கள் சட்டதிருத்தம் ரத்து செய்வது தொடர்பாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவிக்கும் வரை கோர்ட்டு புறக்கணிப்பு தொடரும் என்று ஈரோட்டில் நடந்த வக்கீல்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு:

வக்கீல்கள் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு கொண்டு வந்த திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக சென்னையில் வக்கீல்கள் கண்டன ஊர்வலம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டங்கள் நடத்தினார்கள். இந்த போராட்டம் நடந்து வரும் நிலையில் மதுரையில் ஒரு வக்கீல் மீது நீதிபதி மேற்கொண்ட நடவடிக்கை வக்கீல்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வக்கீல்களுக்கு எதிரான ஐகோர்ட்டின் சட்டதிருத்தத்தை ரத்து செய்யக்கோரியும், வலுவான இயக்கம் அமைக்கும் வகையிலும் ஈரோட்டில் நேற்று மாநில அளவிலான வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் திருமலைராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வக்கீல் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஏகமனதாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இதில் குறிப்பாக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க தேர்தல் நடத்த வேண்டும் என்பதாகும். மேலும், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் செல்வம், அகில இந்திய பார் கவுன்சில் கூட்டுத்தலைவர் பிரபாகரன் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பரிந்துரை செய்யக்கூடாது.

இதையும் மீறி தலைமை நீதிபதி பரிந்துரை செய்தாலும், இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது. இதுதொடர்பாக ஈரோட்டில் நடந்த வக்கீல்கள் சங்க கூட்டத்தின் தீர்மானத்தை பாரத பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் நேரில் வழங்க முடிவு செய்து இருக்கிறோம்.

அடுத்தபடியாக தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும் செயல்பட்டு வரும் இலவச சட்ட உதவி மையங்கள், மக்கள் நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறை மையங்களில் இருந்து அனைத்து வக்கீல்களும் தங்கள் பணியை வாபஸ் பெறுவார்கள். இங்குள்ள தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகுவார்கள்.

மாவட்ட கோர்ட்டுகளில் உள்ள வக்கீல்கள் சங்கங்களுக்கு பார் கவுன்சில் அனுப்பிய நோட்டீசுகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். நோட்டீசு அனுப்பிய நடவடிக்கைக்கு கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.

கீழமை கோர்ட்டுகளில் உள்ள நடைமுறைகளை தெரியாத வக்கீல்களை வைத்துக்கொண்டு வக்கீல்களுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை ஐகோர்ட்டு திரும்ப பெற வேண்டும் என்று கீழமை கோர்ட்டு வக்கீல்கள் மற்றும் வழக்காடிகள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

வக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்து அறிவிக்கும் வரை தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவார்கள். இந்த அறிவிப்பை ஐகோர்ட்டு பதிவாளர் அல்லது வேறு யாராவது அறிவித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தலைமை நீதிபதி அறிவிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். அந்தந்த மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களும் நடைபெறும்.

இதுபோல் இந்த போராட்டத்தின் நோக்கம் குறித்து வழக்காடிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் நடவடிக்கையையும் வக்கீல்கள் நடத்துவார்கள்.

அடுத்தகட்டமாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) திருச்சியில் அனைத்து வக்கீல்கள் சங்கங்களின் கூட்டம் நடைபெறும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு கூட்ட ஒருங்கிணைப்பாளர் பி.திருமலைராஜன் கூறினார்.

Similar News