செய்திகள்
புதுவரவு - கம்ப்யூட்டர்களை அதிவேகமாக இயக்கும் 'ஆப்டேன்': இன்டெல் அறிமுகம்
கணினிகளை தற்போது இருப்பதை விட பல மடங்கு வேகமாக இயக்க உதவும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன்.
ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல் ஆகும். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும்.
கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கணினியை வேகமாக இயக்க ஆப்டேன் மெமரி மாட்யூல்களில் பிரத்தியேக பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கம்ப்யூட்டரின் வேகம் இதுவரை இருப்பதை விட 28% அதிகமாக இருக்கும் என இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்டேன் இருந்தால் வழக்கமாக கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களும் வழக்கத்தை விட வேகமாக இயங்கும் என இன்டெல் தெரிவித்துள்ளது.
ஆப்டேன் மெமரி மாட்யூல் இன்டெல் கோர் i7 சிபியுக்களுடன் வேலை செய்யும் என்றும் இவற்றின் விநியோகம் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையை பொருத்த வரை 16 ஜிபி 44 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,863 மற்றும் 32 ஜிபி 77 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5,010 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்டேன் மெமரி மாட்யூல்களை பயன்படுத்த ஆப்டேன் சப்போர்ட் செய்யும் மதர்போர்டு அவசியமாகும். இவை ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்றது.