செய்திகள்
மின்சாரம் தாக்கி பலியான லோகேசின் பெற்றோருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆறுதல் கூறிய காட்சி.

மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்: ராகவா லாரன்ஸ்

Published On 2017-02-08 12:16 IST   |   Update On 2017-02-08 12:16:00 IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என சேலத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுதியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்ககோரி சேலத்தில் கடந்த 18-ந்தேதி முதல் நடந்த போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் பெங்களூரு-கரைக்கால் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பங்கேற்ற சேலத்தை அடுத்த வீராணம் சத்யா நகரை சேர்ந்த ராஜா என்பவரது மகன் லோகேஷ் என்ற யோகேஷ்வரன் (வயது 17) ரெயிலின் மேற்கூரை மீது ஏறி போராட்டம் நடத்திய போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட லோகேஷ் 19 நாட்களுக்கு பிறகு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

தகவல் அறிந்த கலெக்டர் சம்பத் உடனே அங்கு விரைந்து சென்று லோகேசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது லோகேசின் பெற்றோர் மகனை இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் லோகேசின் உடலை வாங்கி சென்ற அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் டவுனில் உள்ள காகேயன் சுடுகாட்டில் அவரது உடலை தகனம் செய்தனர்.

இதற்கிடையே நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று லோகேஷ் வீட்டுக்கு வந்தார். அவர் வருவதற்கு முன்பு லோகேஷ் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. 10 நிமிடம் வீட்டில் இருந்து லோகேசின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய லாரன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

சின்ன வயதுடைய இந்த வாலிபரின் இழப்பு எது கொடுத்தாலும் ஈடாகாது. இந்த வாலிபர் தமிழ் உணர்வுக்காக உயிர் விட்டுள்ளார். இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அது ரொம்ப குறைவாகும்.

லோகேஷ் மரணம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. அரசும், தமிழ் உணர்வு கொண்டோரும் அவரது குடும்பத்திற்கு உதவ வேண்டும், அவரது குடும்பத்திற்கு மூத்த பிள்ளையாக இருந்து நான் உதவி செய்வேன். சேலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News