செய்திகள்

எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது: தமிழிசை

Published On 2016-11-21 08:31 IST   |   Update On 2016-11-21 12:35:00 IST
பணம் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக இடைத்தேர்தலில் வாக்களித்தவர்கள் சதவீதம் அதிகரித்து இருப்பது ஒரு ஆரோக்கியமான முடிவுக்கு வழிவகுக்கும். இடைத்தேர்தலில் செல்லாத பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா கொண்டு நடந்த கடைசி தேர்தலாக இது இருக்க வேண்டும்.

இனி மக்கள் யாரும் பணத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். எல்லோருடைய வாழ்க்கையிலும் டிசம்பர் 30-ந் தேதிக்கு பிறகு நல்லது நடக்கும். கெட்ட ரத்தமான கள்ள பணத்தை ஒழிக்கவில்லை என்றால் இந்தியா உயிரற்ற நாடாக மாறி இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

திருமாவளவன் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கட்டும். மக்கள் அதை கவனிக்கவில்லை. இலங்கை தமிழர்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தை மறந்துவிட்டு காங்கிரசுடன் திருமாவளவன் பேசுகிறார். பணம் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மக்கள் மனதில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மக்கள் இதற்கெல்லாம் செவிசாய்க்காமல் மத்திய அரசின் திட்டத்துக்கு ஆதரவு தந்து வருகின்றனர். வங்கிகளில் வழக்கமான நடைமுறைகள் வந்துவிட்டன. ரூ.500 நோட்டுகள் வந்து சில்லரை தட்டுப்பாடு சீரானதும் இப்போது உள்ள குழப்பங்களும் மறைந்துவிடும்.

ஏழை மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தும் ஆட்சியை பிரதமர் மோடி நடத்திக்கொண்டு இருக்கிறார். மாற்றங்கள் கொண்டு வரும்போது சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும் என்பதை மக்கள் புரிந்து உள்ளனர்.

டிசம்பர் 30-ந் தேதி வரை பணத்தை மாற்றலாம். எனவே யாரும் பதற்றமடைய வேண்டாம். கருப்பு பணத்தை ஒழிக்க மோடி கொண்டு வந்த இந்த திட்டம், ஏழைகளை பணக்காரர்கள் ஆக்கும். பல நாடுகளில் இதுபோல் திட்டம் வராதா? என ஏங்குகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை தாங்கிக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News