செய்திகள்

தே.மு.தி.க.வில் இருந்து யாராவது வருவார்களா என்று ஸ்டாலின் பார்த்துக் கொண்டு இருக்கிறார்: பிரேமலதா விஜயகாந்த்

Published On 2016-08-30 09:07 IST   |   Update On 2016-08-30 13:12:00 IST
தே.மு.தி.க.வில் இருந்து யாராவது வருவார்களா என மு.க.ஸ்டாலின் பார்த்து கொண்டு இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நகர அவை தலைவர் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

இன்றைக்கு விஜயகாந்த் 300 கோடி வாங்கிவிட்டார், 500 கோடி வாங்கிவிட்டார் என எத்தனை ஏளன பேச்சுகள். 2005-ம் ஆண்டு தே.மு.தி.க. தொடங்கப்படும் வரை தமிழகத்தில் விஜயகாந்தை போல ஒரு வள்ளல் இல்லை, அவரை போல கர்ணன் இல்லை, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் மக்களுக்கு கொடுத்தவர் என மக்களால் போற்றப்பட்டவர்.

2005-ம் ஆண்டுக்குப்பின் விஜயகாந்த் தி.மு.க.விடம் பணம் வாங்கினார், அ.தி.மு.க.விடம் பணம் வாங்கினார், பா.ஜ.க.விடம் பணம் வாங்கினார் என்றால் அது எப்படி உண்மையாகும். விஜயகாந்த் என்றைக்கும் யாருக்கும் விலை போகமாட்டார்.

சட்டசபையில் மு.க.ஸ்டாலின் போஸ் கொடுத்து வெளியில் வருகிறார். நமக்கு நாமே என கூறி டீ சாப்பிட்டு போஸ் கொடுத்தார். இன்றைக்கு சட்டசபையில் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். தே.மு.தி.க.வில் இருந்து யாராவது வருவார்களா என அவர் பார்த்து கொண்டிருக்கிறார். தே.மு.தி.க. லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட செயலாளருமான அனகை முருகேசன், உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர். நகர செயலாளர் ஜெயகுமார் அனைவரையும் வரவேற்றார்.

Similar News