செய்திகள்

தேர்தல் விதிமீறல் வழக்கு: ராமதாஸ் மீதான விசாரணை 12–ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Published On 2016-07-29 16:01 IST   |   Update On 2016-07-30 14:45:00 IST
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி விசாரணையை 12–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

பண்ருட்டி:

பண்ருட்டி சட்டசபை தொகுதியில் கடந்த 2011–ம் ஆண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் நெப்போலியன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த 13–ந் தேதி விசாரணை நடைபெற்றபோது ராமதாஸ் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

பின்னர் 25–ந் தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ராமதாஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து 29–ந் தேதிக்கு(இன்று) வழக்கு விசாரணையை நீதிபதி சரவணபாபு ஒத்திவைத்தார்.

அதன்படி இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. கோர்ட்டில் ராமதாஸ் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் ராஜாராம் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். அதில் டாக்டர் ராமதாசை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து பண்ருட்டி கோர்ட்டில் ராமதாஸ் 15 நாட்கள் ஆஜராகவேண்டாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதி சரவணபாபு ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை வருகிற 12–ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக பண்ருட்டி கோர்ட்டில் நடிகர் நெப்போலியன் இதுவரை ஆஜராகவில்லை. அவர் அமெரிக்காவில் இருக்கிறார். இதனால் அவருக்கு சம்மன் சென்று சேரவில்லை என்று நீதிபதியிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்திய தூதரகம் மூலமாக அவருக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News