பெண்கள் உலகம்
null

இன்றும் தொடரும் உருவக்கேலி... என்று புரியும் பிறரின் வலி...

Published On 2023-03-20 04:44 GMT   |   Update On 2023-03-20 04:45 GMT
  • பெண்களை குறி வைத்து அரங்கேறும் கிண்டல், கேலி அத்துமீறல் அதிகமாக இருக்கிறது.
  • வார்த்தை, சைகை என்று எந்த வடிவத்திலும் கேலி, கிண்டல் செய்ய கூடாது.

ஒருவர் குண்டாக இருக்கிறாரா? அல்லது ஒல்லியாக இருக்கிறாரா? என்பது முக்கியம்இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறாரா? என்பது தான் முக்கியம். அது போல் கருப்பாக இருக்கிறாரா? அல்லது சிவப்பாக இருக்கிறாரா? என்பது அவசியம் இல்லை. நல்ல மனநிலையில் இருக்கிறாரா? என்பதே முக்கியம். இனம், மொழி, உருவம், நிறம் போன்றவற்றை வைத்து யாரையும் எடை போட கூடாது. மேலும் அதை அளவீடாக கொண்டு கேலி, கிண்டல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

சாமுத்திரிகா லட்சணம்

உச்சி முதல் பாதம் வரை ஆண் மற்றும் பெண்ணின் உடல் உறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு மனிதரும் உடல் ரீதியாக தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒருவரை போல் மற்றொருவர் இருக்கு முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும் குடும்பங்கள், பள்ளிக்கூடங்கள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் உருவக்கேலி செய்வது தொடர்கிறது. மேலும் ஒருவரின் உருவம், நடை, உடை, பாவனை போன்றவற்றை பார்த்து உருவக்கேலி செய்வது இன்றளவும் நீடித்து கொண்டு இருக்கிறது. இதனால் சம்மந்தப்பட்ட நபரின் உள்ளார்ந்த மன உணர்வு மற்றும் செயல்திறனை கூட முடக்கி விடுகிறது. அதோடு கேலி செய்பவரின் மனநிலை எந்த அளவில் இருக்கிறது என்பதையும் பிரதிபலிக்கும்.

வார்த்தை, சைகை என்று எந்த வடிவத்திலும் கேலி, கிண்டல் செய்ய கூடாது. ஏன் என்றால் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் மாணவர்கள் படிப்பை பாதியில் விடுதல், தொழிலாளர்கள் பணியில் இருந்து விலகுதல் போன்ற முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலர் கேலி, கிண்டல் அவமானத்தால் ஏற்படும் வலியில் வாழ்வை முடித்துக் கொள்ளும் தவறான முடிவை எடுக்க கூடிய நிலைக்கு கூட தள்ளப்படுகின்றனர். எனவே உருவக்கேலி என்பது மனித உரிமை மீறல் ஆகும்.

தன்னம்பிக்கையை இழக்க கூடாது

ஒருவரின் நிறம், உயரம், எடை, கண் பார்வை, முடி என உருவத்தை பார்த்து யார் கேலி கிண்டல் செய்தாலும் கவலைப்பட தேவை இல்லை. எது பலவீனம் என்று கூறுகிறார்களோ அதையே பலமாக்கி முன்னேறியவர்கள் அதிகம் உள்ளனர். எனவே எந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

ஒரு மாணவருக்கு உடல் அல்லது மனதளவில் கேடு, அவமானம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவது கேலி வதை என்று கூறப்படுகிறது. எனவே தான் கல்வி நிறுவனத்துக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கேலி செய்வது, உடந்தையாக இருப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

எனவே கேலி வதை தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக கல்வி நிறுவன நிர்வாகத்தினர் விசாரணை நடத்த வேண்டும். அது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான கேலி, கிண்டல் என்பது அவர்களை துன்புறுத்துவதாக கருதப்படுகிறது. அந்த பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளை மீட்டு சரி செய்ய வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமை ஆகும்.

கேலி, கிண்டல்

இது போல் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் ஈவ் டீசிங் எனப்படும் பெண்களை குறி வைத்து அரங்கேறும் கிண்டல், கேலி அத்துமீறல் அதிகமாக இருக்கிறது. அது சில நேரங்களில் பெண்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்று விடுகிறது. ஈவ்டீசிங் குற்றங்கள் நிகழ ஆணாதிக்க மனோபாவமே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஒரு ஆணின் முறை தவறிய நடத்தை அல்லது செயலால் ஒரு பெண்ணுக்கு அச்சம், பயம், அவமானம், தொல்லை மற்றும் உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளாவது ஈவ்டீசிங் என்று கூறப்படுகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. செல்போன்கள், இணையதளம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி, உருவப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரகம் பரிந்துரை செய்து உள்ளது.

நாகரிக சமுதாயம்

ஒருவரை கேலி, கிண்டல், அவமதிப்பு செய்வதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி கேலி, கிண்டல்களை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும். அது ஒன்று தான் எந்த அவமதிப்பில் இருந்தும் நம் வாழ்வை காத்துக்கொள்ளும் ஒரே வழியாக இருக்கும்.

மேலும் ஒவ்வொருவரும் மனரீதியாக தங்களை உயர்ந்த சிந்தனையுடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கேலி கிண்டலால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் வலியை நாம் புரிந்து கொண்டால் அவர்களுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்வோம். அதை நோக்கி செல்வது தான் நாம் நாகரிக சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதற்கு சான்றாக இருக்கும்.

Tags:    

Similar News