வழிபாடு

அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்பட்ட போது எடுத்த படம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கலி வேட்டை

Published On 2023-01-28 05:51 GMT   |   Update On 2023-01-28 05:51 GMT
  • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
  • நாளை அய்யா வைகுண்ட சாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-வது நாளான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி கொலு வீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டு சென்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் தலைமைப்பதியை சுற்றிவந்து முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு கூடியிருந்த திரளான அய்யாவழி பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்ற கோஷம் முழங்க கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்திரி கிணற்றங்கரையில் பக்தர்களுக்கு பதம் வழங்கப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்ட குதிரை வாகனம் சுற்றுப்பகுதி கிராமங்களான செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக இரவு 9 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. கிராமங்களில் வழிநெடுகிலும் பக்தர்கள் அய்யாவுக்கு பூ, பழம், பன்னீர், தேங்காய் போன்றவற்றை சுருளாக வைத்து ஆசி பெற்றனர். இரவு 10 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யா வைகுண்ட சாமியின் தவக்கோல காட்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கலிவேட்டை நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை அய்யா வைகுண்ட சாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவையும் நடைபெறுகிறது. மேலும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News