வழிபாடு

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 1008 கலசாபிஷேக பூஜை

Published On 2022-07-19 08:32 GMT   |   Update On 2022-07-19 08:32 GMT
  • திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ளது ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில்.
  • இன்று மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற குடவறை கோவிலான இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதையடுத்து உலக மக்கள் நோய், நோடியின்றி ஆரோக்கியமாக வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டி 1008 கலசாபிஷேக விழா கடந்த 13- ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

இதைதொடர்ந்து சாந்தி ஹோமம், திரச ஹோமம், ப்ரவேசபலி, ரசோக்ன ஹோமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி நவக்கிரக ஹோமம், அஸ்த்ரமந்த ஐயம் நிகழ்ச்சி மற்றும் வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் 1008 கலசாபிஷேகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு விழா தீர்த்தஸங்க்ரஹணம் நிகழ்ச்சியும், மிருத்சங்கிரஹரணம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷா பந்தனம், கடஸ்தாபனமும், இரவு முதற்கால யாகசாலை பூஜைகள், சதுர்லெக்ச ஜெபம் நடைபெற்றது.

தொடர்ந்து முதற்கால பூர்ணாகுதியும், தீபாராதனையும் நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜைகளும், சதுர்லெக்ச ஜெபமும், மதியம் இரண்டாம் கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும், மாலை 3-வது கால யாகசாலை பூஜைகளும், சதுர்லெக்ச ஜெபமும், இரவு 3-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது.

நேற்று காலை 9 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜைகளும், சதுர்லெக்ச ஜெபமும், மதியம் 12 மணிக்கு 4-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும், மாலை 5 மணிக்கு 5-வது கால யாக பூஜை மற்றும் சதுர்லெக்ச ஜெபமும், இரவு 8.30 மணிக்கு 5-வது கால பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.

இன்று(செவ்வாய்க்கிழமை) 19-ந்தேதி காலை 8.30 மணிக்கு 6-வது கால யாக பூஜைகளும், 11 மணிக்கு சதுர்லெக்ச ஜெபதசாம்ச ஹோமங்களும், 6-வது கால மஹாபூர்ணாகுதி தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு கலசாபிஷேக தொடக்க அலங்காரம், தீபாராதனைகளும் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் கருப்பஞ் செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டினம் சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News