வழிபாடு

உண்ணாமலைக்கடையில் இருந்து சந்தன குடத்தை பவனியாக எடுத்து வந்தவர்களை படத்தில் காணலாம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-03-11 06:21 GMT   |   Update On 2023-03-11 06:21 GMT
  • வலிய படுக்கை பூஜை ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே நடக்கும்.
  • அம்மனை மலர்களால் அலங்கரித்து இருந்தனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் அம்மன் பவனி, சமயமாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

6-ம் நாள் திருவிழாவை யொட்டி நேற்று காலையில் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 11.30 மணிக்கு ராஜபாளையத்தில் இருந்து செவ்வாடை பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பருத்திவிளை இந்து சமுதாய பேரவை சார்பில் சந்தனக்குட பவனியும், உண்ணாமலைக்கடையில் இருந்து சந்தனகுட பவனியும் கோவிலை வந்தடைந்தது. இதே போல் மாலையில் குளச்சலில் இருந்து மாவிளக்கு ஊர்வலமும், குளச்சல் களிமார் கணேசபுரம் பிள்ளையார் கோவிலில் இருந்து சந்தனகுட பவனியும் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.

இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் திருக்கண் சாத்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது. இந்த பூஜை ஒரு ஆண்டில் மூன்று முறை மட்டுமே நடக்கும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த பூஜை மாசி திருவிழா தவிர மீனபரணி கொடை விழா, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் தான் நடைபெறும்.

வலிய படுக்கை பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திரளி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழவகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டிருந்தது. அப்போது அம்மனை மலர்களால் அலங்கரித்து இருந்தனர். வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News