வழிபாடு

திருவாவடுதுறை ஆதீனம் சாமி தரிசனம் செய்த போது எடுத்த படம்.

குத்தாலம் கோமுக்தீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்த ஐதீக விழா

Published On 2023-01-24 07:02 GMT   |   Update On 2023-01-24 07:02 GMT
  • இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தங்கி தரிசனம் செய்து வந்தார்.
  • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர் கோவில் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடைய இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தங்கி தரிசனம் செய்து வந்தார்.

அப்போது அவரது தந்தை சிவபாத இருதயர் உலக நன்மைக்காக தான் ஏற்பாடு செய்திருந்த யாகத்திற்கு, திருஞானசம்பந்தரிடம் பொருளுதவி கேட்டு திருவாவடுதுறை வந்தார். இதனையடுத்து திருஞானசம்பந்தர், உலவாக்கிழி திருப்பதிகம் பாடி கோமுக்தீஸ்வரரிடம் 1000 பொற்காசுகள் அடங்கிய பொற்கிழி பெற்றதாக ஐதீகம்.

இந்த நிகழ்வை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கோமுக்தீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு, இறைவன் பொற்கிழி வழங்கும் ஐதீக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்த ஐதீக விழா நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு, திருஞானசம்பந்தர் உற்சவமூர்த்திகள் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து கோமுக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளினர். அங்கு உலவாக்கிழி பதிகத்தை ஓதுவார்கள் பாடினர்.

தொடர்ந்து கோவிலில் இருந்து பூதகணம் பொற்கிழியை சுமந்து வந்து, பலி பீடத்தில் வைத்து, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டாற்றிய திருமுறை இசை அறிஞர்கள் 4 பேருக்கு ரூ.5ஆயிரம் அடங்கிய பொற்கிழியை வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News