வழிபாடு
அட்சய திருதியை லட்சுமி வழிபாடு

அட்சய திருதியை பற்றிய 80 சிறப்பு தகவல்கள்

Published On 2022-05-03 11:21 IST   |   Update On 2022-05-03 11:42:00 IST
அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கி போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், ‘கனகதாரை’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

2. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு அட்சய திருதியை நாளில் செய்யப்படுகிறது.

4. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

5. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

6. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

7. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் பவிஷ்யோத்தர-புராணம் விரிவாக விவரிக்கிறது.

8. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

9. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழையூர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

10. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

11. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

12. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

13. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

14. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

15. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

16. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

17. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக,மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

18. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.

19. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

20. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.

21. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

22. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.

23. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

24. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.

25. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

26. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

27. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.

28. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

29. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பே அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

30. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

31. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

32. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கி போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், ‘கனகதாரை’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.

33. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்தி ரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.

34. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.

35. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

36. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

37. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.

38. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

39. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

40. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியையாகும். 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதி பலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.

41.அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

42. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.

43. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

44. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

45. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச்சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

46. அரிதான வேலையை செய்வதை ‘அலப்ய யோகம்ப என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

47.அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை ‘தர்மகடம்’ எனப்போற்றுவர்.

48. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு ‘அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்றும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு ‘அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

49. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.

50. அட்சய திருதியை நாளில் ‘வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுதல் வேண்டும்.

51. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் ‘அட்சய தீஜ்’ என்றழைக்கிறார்கள்.

52. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

53. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத் தால் வியா பாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

54. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.

55. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத் தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.

56. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடை பிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.

57. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

58. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

59. மகாலட்சுமியின் பரி பூரண அருளை ஒவ்வொரு வரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

61. அட்சய திருதியை நாளில் சூரியனும், சந்திரனும் சம பலம் கொண்டு திகழ்வார்கள்.

62. அட்சய திருதியை தினத்தை அந்த காலத்தில் திருமாலுக்கு உகந்த நாளாகக் கருதி கொண்டாடினார்கள்.

63. பல யுகங்களுக்கு முன்பு குபேரன் சாதாரண திக்பாலகர்களில் ஒருவராக இருந்தார். பணக்காரனாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் நாரதர் அறிவுரைப்படி லட்சுமியை வழிபட்டார். லட்சுமியும் உடனே அவரிடம், சித்திரை மாதம் அட்சய திருதியை தினத்தன்று என்னை வழிபட்டால் பணக்காரன் ஆகலாம் என்றார். அதன்படி குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளை பெற்றார்.

64. ஆண்டு முழுக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கும் சமணர்கள் அட்சய திருதியை தினத்தன்று தான் தங்கள் விரதத்தை முடிப்பார்கள். இதனால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.

65. அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருப்பதை விட லட்சுமி பூஜை செய்வதே சிறப்பானதாக கருதப்படுகிறது.

66. அட்சய திருதியை தினத்தன்று மகா லட்சுமிக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதத்தை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

67. அட்சய திருதியை தினத்தன்று லட்சுமியை சிவப்பு ரோஜா, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சிப்பது நல்லது. அந்த சமயத்தில் கனகதாரா ஸ்தோத்திரம் பாடுவது இன்னும் சிறப்பாகும்.

68. அட்சய திருதியை தினத்தன்று வீடு முழுவதும் துளசி தீர்த்தம் தெளித்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

69. அட்சய திருதியை தினத்தன்று தண்ணீர் பந்தல் அமைத்து மற்றவர்களின் தாகத்தை தணித்தால் முன் வினைகள் தீரும்.

70. அட்சய திருதியை தினத்தன்று குடிநீரில் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் மூன்று நதிகளையும் மனதுக்குள் வணங்கிக் கொள்ள வேண்டும்.

71. அட்சய திருதியை தினத்தன்று ஏழை, எளியவர்களுக்கு நாம் செய்யும் உதவி பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.

72. அட்சய திருதியை அன்று சுயம்பு மூர்த்தி எழுந்தருளியுள்ள தலங்களில் அன்னதானம் செய்து வந்தால் குடும்பத்தில், அலுவலகத்தில் உண்டாகும் மனக் குழப்பங்கள், தகராறுகள் நீங்கி அமைதி நிலவும்.

73. அட்சய திருதியையின் மகத்துவத்தை பாமர மக்களும் அறிவதற்காகவே சிவபெருமான், அன்னபூரணி, பிரம்மா என்ற தெய்வ மூர்த்திகளே திருவிளையாடல்களைப் புரிந்து, நம்முடைய குற்றங்களைக் களைந்து நம்மை நாமே திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அட்சய திருதியை என்னும் புனித நாளில் அளிக்கின்றார்கள் என்பதே உண்மை.

74. தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறை, அன்னபூரணி தேவி கோயில் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம், அம்பாள் சிறப்புப் பெற்ற தலங்களான சமயபுரம், வெக்காளியம்மன் கோயில், மாகாணி அம்மன், கோட்டை மாரியம்மன் போன்ற திருத்தலங்களில் அட்சய திருதியை அன்று அன்னதானம் இயற்றுவது மிகவும் சிறப்புடையது.

75. திருவானைக்கா கோவிலில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ளது குபேரலிங்கம். இந்த லிங்கத்தை அட்சய திருதியை நாளன்று பால், தேன், சந்தன அபிஷேகம் செய்துவழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, வறுமை தொலைந்து வளமாக வாழலாம். இத்தலத்தில் ஆடை தானமும் அன்ன தானமும் செய்வது சிறப்பு.

76. தமிழ் வருடங்களான அறுபது வருடங்கள். ‘பிரபவ’ என த்தொடங்கி, ‘அட்சய’ என்று நிறைவடையும். ‘அட்சய’ வில் முடியக்காரணம் காலத்திற்கு முடிவில்லை; அக்ஷயமாய் அவை வளர்ந்து அடுத்த சுழற்சி ஆரம்பமாகும் என்று உணர்ததவே தான்.

77. மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்.. உப்பின் பிறப்பிடம் கடல் ஆகவே உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம். அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம்.

78. அட்சய திருதியை தினத்தன்று கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.

79. அட்சய திருதியை அன்று குபேரர் கோவிலை வழிபட்டால் செல்வங்களும் பெருகும்.

80. அட்சய திருதியை அன்று குறைந்தது ஒரு வார காலத்துக்கு தேவையான உணவுப் பண்டங்களை தானமாக அளிக்க வேண்டும். இது நவக்கிரகங்களின் அனுக்கிரக சக்திகளைப் பெருக்கி நமக்கு பலன்தரும்.

Similar News