வழிபாடு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

Published On 2022-04-28 12:22 IST   |   Update On 2022-04-28 12:22:00 IST
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைதேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் ஆழ்வான் திருசுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றார்.

8-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 8.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபம் வந்து சேருகிறார்.

பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் ரெங்கவிலாஸ் மண்டபத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சித்திரை தேர் அருகே வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையைசென்றடைகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேருகிறார். இதையடுத்து அதிகாலை 5.30 மணி முதல் அதிகாலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளுகிறார்.

தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் கீழ சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி ஆகிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடையும். சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் தொண்டுநிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீசார் செய்து வருகின்றனர். நாளை மறுதினம் (சனிக்கிழமை) இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்படும், 1-ந் தேதி இரவுஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

Similar News