வழிபாடு
அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேர் அலங்கரிக்கும் பணி தொடங்கப்பட்டது

அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேர் அலங்கரிக்கும் பணி தொடங்கப்பட்டது

Published On 2022-04-26 09:23 IST   |   Update On 2022-04-26 09:23:00 IST
அவினாசிலிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் ஆயகால பூஜை செய்து தேர் அலங்கரிக்கும் பணி தொடங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 12-ந்தேதி தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகியாக உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்று சிறப்புடையதாக உள்ளது. இக்கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று  பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது சகஜ நிலை ஏற்பட்டதால் இந்த வருடம் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

எனவே வழக்கம்போல் தேருக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிக்காக ஆயகால பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து வருகிற 5-ந் தேதி காலை கொடியேற்ற நிகழ்ச்சியும், 6-ந்தேதி சூரிய, சந்திர வாசன காட்சி, 7-ந் தேதி அதிகார நந்தி, கிளி, பூத அன்ன வாகன காட்சிகள், 8-ந் தேதி கைலாசவாகன, புஸ்பவிமான காட்சிகள் நடைபெற உள்ளது. 9-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் ஆகியவை நடக்க உள்ளது. 10-ந் தேதி கற்பகவிருட்சம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சிகள் நடக்கிறது. 11-ந் தேதி காலை 5.30 மணியளவில் பூர நட்சத்திரத்தில சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 12-ந் தேதி காலை 9 மணியளவில் தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு தேர் வடக்கு ரதவீதியில் நிறுத்தப்படும். பின்னர் 13-ந் தேதி தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட உள்ளது. 14-ந் தேதி காலை அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 15-ந் தேதி தெப்ப தேரோட்டம் நடக்கிறது. 17-ந் தேதி நடராசப்பெருமான் தரிசனம் நடக்க உள்ளது. 18-ந்தேதி மஞ்சள் நீர் விழாவுடன் நிறைவடைகிறது.

Similar News