ஆன்மிகம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் நடந்தபோது எடுத்த படம்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

Published On 2021-11-03 04:15 GMT   |   Update On 2021-11-03 04:15 GMT
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மண்டகப்படிதாரர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு செண்பகவல்லி அம்மன், பூவனநாத சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் சுவாமி, அம்பாள் மணக்கோலத்தில் எழுந்தருளினர். மண்டகப்படிதாரர்கள் மற்றும் பக்தர்கள் திருமண சீர்கொண்டு வந்தனர். நீலாதேவி, ஸ்ரீதேவி சமேத சுந்தரராஜபெருமாள் அழைத்து வரப்பட்டார்.

இதைத்தொடர்ந்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மனைவி இந்திரா காந்தி, மண்டகப்படிதாரர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவில் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நல்லதவம் செய்த நாச்சியார் அம்பாள் சமேத வீரபாண்டீஸ்வரருக்கு ஐப்பசி திருக்கல்யாண விழா 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை அம்பாள் தவசுக்கு எழுந்தருளல், தொடர்ந்து பல்வேறு பூஜைகளும், இரவு சுவாமி அம்மாளுக்கு காட்சி கொடுத்தலும் நடைபெற்றது.

ேநற்று காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அம்பாளுக்கு சீர் கொண்டு வருதல், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் நலுங்கு உருட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து அம்பாள், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் பட்டினப்பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிவ பக்தர்கள் சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News