ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதை படத்தில் காணலாம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை வெறிச்சோடியது

Published On 2021-08-09 03:15 GMT   |   Update On 2021-08-09 03:15 GMT
ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.
தை, ஆடி அமாவாசைகளில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஆடி, தை அமாவாசை நாட்களில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள்.

இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆடி அமாவாசையான நேற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

நேற்று காலையில் சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், பைரவர் கோவில் கடற்கரையிலும் தர்ப்பணம் கொடுப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அப்பகுதியில் பக்தர்கள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் தாலுகா போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 8 நாட்களாக கோவில் வளாகத்துக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்று (திங்கட்கிழமை) முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
Tags:    

Similar News