ஆன்மிகம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மூடப்பட்டிருந்ததால் வெளியில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தபோது எடுத்த படம்.

ஆடி அமாவாசை தினத்தில் சென்னையில் கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம்

Published On 2021-08-09 08:18 IST   |   Update On 2021-08-09 08:18:00 IST
கொரோனா அச்சம் காரணமாக ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் தரிசனம் மேற்கொள்ளவும், நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒவ்வொரு மாதமும் வரும், அமாவாசையை விட ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியத்துவம் பெற்றது. இது மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் ஒரு உன்னதமான நாளாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது நம்முடைய பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

அந்தவகையில் அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடந்து வருகிறது. நீர்நிலைகளில் நீராடி காலை உணவு உண்ணாமல் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை வைத்து வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டும் கொரோனா தாக்கம் காரணமாக ஆடி அமாவாசையில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்தது. கூட்ட நெரிசல் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு நேற்று தடை விதிக்கப்பட்டு இருந்தது. கோவில் அருகே உள்ள நீர்நிலைகளிலும் தர்ப்பணம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், திருவான்மியூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் கடற்கரையில் தர்ப்பணம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். பல இடங்களில் கடற்கரையை மறைத்து தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

ஒரு சிலர் போலீசார் கண்ணில் படாமல் கடற்கரை மறைவான பகுதியில்தர்ப்பணம் கொடுத்த காட்சிகளை பார்க்க முடிந்தது. இதேபோல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் அருகேயும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கோவில்களில் வழிபாடு நடத்தவும், நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதவர்கள் தங்கள் வீடுகளில் முன்னோர்களின் படங்களை வைத்து வழிபாடு நடத்தினர். சமைத்த உணவை முதலில் காகத்திற்கு வைத்து வழிபட்டனர்.

மெரினா கடற்கரைக்கு வந்த கார்த்திக் குடும்பத்தினர் கூறும்போது, ‘அரசின் அறிவிப்பு எங்களுக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளில் தடை விதிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது' என்றனர்.

Similar News