ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலில் பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் உலா

ராமேசுவரம் கோவிலில் பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் உலா

Published On 2021-08-07 11:05 IST   |   Update On 2021-08-07 11:05:00 IST
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 6-வது நாளான நேற்று பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வழக்கமாக ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் அம்பாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி ரத வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனாபரவல் கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதோடு திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. அதனால் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிலின் உள்ளேயே நடைபெற்று வருகிறது. ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 4 நாட்களாக ராமேசுவரம் கோவிலில் அம்பாள் தங்க பல்லக்கில் உலா நிகழ்ச்சி நடத்தப் படாமல் இருந்துவந்தது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மற்றும் பக்தர்கள் கோவில் இணை ஆணையரிடம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் அம்பாள் தங்கப்பல்லக்கில் உலா வரும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 6-வது நாளான நேற்று காலை 9 மணி அளவில் பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாளுடன் கூடிய தங்கப்பல்லக்கை சீர்பாத பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சுமந்து 3-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.

அப்போது விநாயகர், சண்டிகேசுவரர், முருகப்பெருமான் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் அம்பாளுக்கு முன்பாக மரக்கேடயத்தில் 3-ம் பிரகாரத்தில் உலா வந்தனர். நிகழ்ச்சியில் கோவிலின் இணை ஆணையர் பழனிக் குமார், பேஷ்கார்கள் கமலநாதன், கலைச்செல்வன், அண்ணாதுரை, செல்லம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Similar News