ஆன்மிகம்
அகரம்பள்ளிபட்டு தென்பெண்ணையாற்றில் ஆடு, கோழி பலியிட்டவர்களை படத்தில் காணலாம்.

அகரம்பள்ளிபட்டு அம்மன் கோவில் பூட்டப்பட்டதால் பக்தர்கள் வேதனை

Published On 2021-08-04 02:49 GMT   |   Update On 2021-08-04 02:49 GMT
ஆடிச்செவ்வாயன்று விழாக்கோலத்துடன் காணப்படும் அகரம்பள்ளிபட்டு கோவில் பூட்டப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். தென்பெண்ணை ஆற்றில் ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிட்ட பக்தர்கள் கோவில் முன் வைத்து வழிபட்டு சென்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையொட்டி பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவில் விழாக்கள் தடைசெய்யப்பட்டு தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டு கோவில்கள் மூடப்பட்டுள்ளன.

வாணாபுரம் அருகே அகரம்பள்ளிபட்டில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அரசின் தடை உத்தரவு காரணமாக 3-வது செவ்வாய் கிழமையான நேற்று திடீரென கோவில் நடை பூட்டப்பட்டது.ஆனால் இதனை அறியாத பொதுமக்கள் ஏராளமானோர் கோவிலுக்கு திரண்டு வந்ததால் வேதனை அடைந்தனர்.

கூட்டத்தை போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் பக்தர்கள் அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு ஏராளமான பக்தர்கள் கிடா, கோழி உள்ளிட்டவைகளுடன் வேன், கார், மாட்டுவண்டிகளில் திரண்டு வந்தனர்.்

அவர்கள் ஆற்றுக்குள் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்தனர். பின்னர் அதனை அகரம்பள்ளிபட்டு கோவில் முன் பகுதியில் கொண்டு வந்து வைத்து பூஜை செய்து பிறகு எடுத்துச் சென்றனர்.

இதேபோல் வரகூரில் உள்ள ஸ்ரீ பிடாரி காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டு திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா நடைபெறவில்லை.

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிப்பாடி பாலசுப்பிரமணியர் கோவிலில் முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகையன்று அரசின் தடை உத்தரவால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பக்தர்கள் பலரும் தடை செய்யப்பட்ட பகுதியில் கோவிலை பார்த்தவாறு கற்பூரம் ஏற்றி வைத்து வணங்கிச் சென்றனர்.

கண்ணமங்கலத்தில் கிராம தேவதை பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
Tags:    

Similar News