ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி

Published On 2021-07-20 02:47 GMT   |   Update On 2021-07-20 02:47 GMT
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்த்து, முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் சுயம்பு புற்று வடிவிலானது ஆகும். கேரள பெண் பக்தர்கள் இருமுடிக் கட்டி இங்கு வந்து அம்மனை வழி படுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

கடந்த மாதம் 2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கோவிலின் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலில் தேவ பிரசன்னம் பார்த்து, முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடந்தது. அதைத்தொடர்ந்து வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

சுசீந்திரம் பிரதீபன் நம்பூதிரி வாஸ்து பார்த்தார். கோவில் கருவறை கட்டிடத்தின் நீளம், அகலம் அளவுகள் அளந்து குறிக்கப்பட்டது. இதில் கோவில் தந்திரி சங்கர நாராயணன் அய்யர், திருவனந்தபுரம் ஜோதிடர் ராஜேஷ், கோவில் ஸ்ரீகாரியம் மோகன்குமார், இந்து முன்னணி, இந்து கோவில் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வாஸ்து அறிக்கை ஒரு வாரத்திற்குள் சுசீந்திரம் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என வாஸ்து நிபுணர் பிரதீபன் நம்பூதிரி கூறினார்.

வாஸ்து பார்க்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆரூடம் பார்க்கப்படும். ஆரூட அறிக்கை அடிப்படையில் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் நடைபெறும்.
Tags:    

Similar News