ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2021-07-19 14:05 IST   |   Update On 2021-07-19 14:05:00 IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த 5-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் கோவில் கடல், நாழிக்கிணறு பகுதியில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 15-ந்தேதி சஷ்டி திதி, 16-ந்தேதி வெள்ளிக்கிழமை, நேற்று முன்தினம் ஆடி மாத பிறப்பு, நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோவிலில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News