ஆன்மிகம்
விநாயகருக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்ற போது எடுத்த படம்

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

Published On 2021-07-19 10:23 IST   |   Update On 2021-07-19 10:23:00 IST
ஆடி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத பிறப்பையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பழம், சந்தனம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடி மாத பிறப்பையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பகவதி அம்மன், காளியம்மன் கோவில், கோவில்பட்டி கைலாசநாதர், திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி ஆகிய கோவில்களிலும் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதேபோல் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான சேவையில் மின் இழுவை ரெயில் மட்டும் இயக்கப்படுவதால் நேற்று அங்கு கூட்டம் காணப்பட்டது.

மேலும் பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பக்தர்களின் நலனுக்காக கோவில் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டது.

இதற்கிடையே மாத பிறப்பையொட்டி மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News