ஆன்மிகம்
முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ஆனி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-07-16 08:16 IST   |   Update On 2021-07-16 08:16:00 IST
ஆனி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
ஆனிமாத சஷ்டியையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி நாமக்கல் காந்திநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இறுதியாக தங்ககசவம் அணிவிக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஆனி மாத சஷ்டியையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்படி கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்தி நகர் முருகன், பேட்டை பகவதியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் ஆனி மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News