ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகத்திற்கு பதில் மாற்று ஏற்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகத்திற்கு பதில் மாற்று ஏற்பாடு

Published On 2020-09-29 08:17 GMT   |   Update On 2020-09-29 08:17 GMT
கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறாது. அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டு கொரோனா பிரச்சினை காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தியது. இதில் சபரிமலையில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல பூஜைக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்பு அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி தேவஸ்தான தலைவர் வாசு கூறியதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாவுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டுவரவேண்டும். வெளிமாநில பக்தர்களுக்கு நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் .

கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறாது. அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவில் சன்னிதானத்தில் தங்க அனுமதி கிடையாது. அவர்கள் உடனடியாக மலையில் இருந்து திரும்பிவிட வேண்டும். அன்னதானம் வழங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

10 வயதிற்கு குறைவான மற்றும் 65 வயதிற்கு அதிகமான பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News