ஆன்மிகம்

தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-09-26 05:41 GMT   |   Update On 2018-09-26 05:41 GMT
திக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.
விருச்சிக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடையும்போது நடக்கும் நிகழ்ச்சி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் ஆலய தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் 144 ஆண்டுகளுக்கு பின்னர் மகா புஷ்கரவிழா நடக்கிறது.

இந்த விழா வருகிற 12-ந்தேதி(அக்டோபர்) தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திக்குறிச்சி மகாதேவர் ஆலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழாக்குழு ஒருகிணைப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். திருகயிலை சிவனடியார்கள் கூட்ட தலைவர் ஜெயந்தி வெள்ளத்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிவனடியார்கள் கூட்ட துணைத்தலைவர் பார்வதி, செயலாளர் அனிதா பாண்டியன், துணை செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் கீதா ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் குழிச்சல் செல்லன், பா.ஜனதா மாநில விவசாய அணி செயலாளர் ரவீந்திரன் மற்றும் திக்குறிச்சி மகாதேவர் ஆலய பக்தர்கள் சேவா சங்க செயலாளர் சசிகுமார், வினோத், கிராம கோவில் கூட்டமைப்பு செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்

விழா நடக்கும் 12 நாட்களும் தாமிரபரணி ஆற்றில் ஹோமங்கள், முன்னோர்கள் நினைவு தர்ப்பணம், கோ தானம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவை வெள்ளிமலை சைதன்யானந்தஜி தொடங்கி வைக்கிறார்.

நிறைவு நாள் விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், கல்லிடைகுறிச்சி பரமாசாரிய சுவாமிகள், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த விழா 144 ஆண்டுகளுக்கு பின் நடத்தப்படுகிறது. இதில் 5 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். எனவே பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News