ஆன்மிகம்

கன்னியாகுமரி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் 40 அடி உயர கொடிமரம்

Published On 2018-06-27 08:32 GMT   |   Update On 2018-06-27 08:32 GMT
கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் 40 அடி உயர புதிய கொடிமரம் நிறுவப்படுகிறது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.24 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்ட திருமலை திருப்பதி ே-்தவஸ்தான பட்ஜெட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது. இதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அதன்பிறகு கோவில் கட்டுமான பணி தொடங்கியது. தற்போது இந்த கோவில் 2 தளமாக கட்டப்பட்டு உள்ளது.

கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண அரங்கம், தியான அரங்கம், அலுவலகம் போன்றவைகளும் மேல்தளத்தில் ஏழுமலையான் வெங்கடாசலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள்அம்மாள் சன்னதி, கருடபகவான் சன்னதி போன்ற சன்னதிகளும் சுவாமிக்கு நிவேத்தியம் தயாரிப்பதற்கான மடப்பள்ளியும் லிப்ட் வசதியும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. கோவிலை சுற்றி தேர் ஓடுவதற்காகவும், வாகன பவனிக்காகவும் 4 மாடவீதிகள் கட்டப்பட்டு உள்ளன.

கோவிலின் மூலஸ்தானத்தில் நிறுவப்பட உள்ள ஏழுமலையான் வெங்கடாசலபதி சிலை 6½ அடி உயரத்திலும் பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள் ஆகியோருக்கு 3 அடி உயர சிலைகளும் வடிவமைக்கும் பணி திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான சிற்ப கலை கல்லூரியில் நடந்து வருகிறது. கருவறையில் ஏழுமலையான் கால் பாதத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசு தினமான ஏப்ரல் 14-ந் தேதி அபூர்வ சூரிய ஒளி விழும் வகையில் பொறியியல் வல்லுனர்கள் வடிவமைத்து கட்டி உள்ளனர். கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவிலில் நிறுவப்பட உள்ள தேக்கு மரத்தினாலான 40 அடி உயர புதிய கொடிமரம் நிறுவ தூத்துக்குடியில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் நேற்று விவேகானந்த கேந்திராவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கொடிமரம் திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயற்பொறியாளர் சந்திரமவுலி ரெட்டி, உதவி பொறியாளர் அமர்நாத்ரெட்டி ஆகியோர் தூத்துக்குடி சென்று இந்த கொடிமரத்துக்கான தேக்கு மரத்தடியை தேர்வு செய்து கொண்டு வந்தனர். அங்கு அந்த கொடிமரம் ராட்சத கிரேன் மூலம் கன்டெய்னர் லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது. இந்த கொடிமரம் விரைவில் வடிவமைக்கப்பட்டு கோவில் மேல்தளத்தில் நிறுவப்படும் என்று தெரிகிறது. இதில் 7 அடி உயரம் கொடிமரத்தின் அஸ்திவாரத்தில் இருப்பதற்கு வசதியாகவும் மீதம் உள்ள 33 அடி உயரம் மேலே தெரியும்படியும் நிறுவப்பட உள்ளது. 
Tags:    

Similar News