ஆன்மிகம்
திருக்கல்யாண கோலத்தில் வேதநாராயணபெருமாள்.

தொட்டியம் அருகே வேதநாராயணபெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2018-06-02 08:57 IST   |   Update On 2018-06-02 08:57:00 IST
தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவில் வைகாசி திருவிழாவில் நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நாளை தேரோட்டம் நடக்கிறது.
தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் சிறப்பு வாய்ந்த வேதநாயகி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. வைணவத்தலங்களில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான இங்கு பெருமாள் நான்கு வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார். இதனால் தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித்தருகிறார்.

மேலும் பிரகலாதஷேத்திரம், அரையருக்கு மோட்சம் தந்த ஸ்தலம் என பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 25-ந்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து தினமும் பெருமாள் துவஜா ரோஹனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருடவாகனம், ஹனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை நம்பிரான் ஆகிய வாகனங்களில் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

7-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு 7 மணிக்கு சூர்ணாபிஷேகம், நெல்லளவு கண்டருதல், எம்பெருமான் உபயநாச்சியாருடன் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து தீர்த்தவாரி, கேடயம் சாற்றும் முறை, புஷ்ப பல்லக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News