ஆன்மிகம்

சக்கரத்தம்மாளும் லலிதா சகஸ்ர நாமமும்

Published On 2018-05-27 07:44 GMT   |   Update On 2018-05-27 07:44 GMT
மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது. அவர் அந்த சக்தியை பெற ஸ்ரீலலிதா சகரஸ்நாமம்தான் அடித்தளம் அமைத்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் அவதரித்த பெண் சித்தர்களில் மிகுந்த தனித்துவம் கொண்டவர் ஸ்ரீசக்கரத்தம்மாள். இவரது இயற்பெயர் அனந்தாம்பாள். 1854ம் ஆண்டில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர்.

குழந்தை ஞானச் செறிவுடன்வளர்ந்து வரும் வேலையில் திடீரென்று தாயார் காலமானார். தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் குழந்தை வளர்ந்தது.

லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. திடீரென சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்ப சிவனுடன் திருமணம் நடந்தது.

மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். சிறுமியான அவள் திருமண வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அதேசமயம் அவரது ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந் தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார். ஒருநாள் கணவர் இறந்து விட்டார். அனந்தாம் பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டதுடன், காவி வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்து அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20.

“பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு” என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர். தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது. உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது.

இவ்வாறு பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த அம்மா, 1901-ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் நாள், இறை ஜோதியில் ஐக்கியமானார். அவருக்கு சென்னை திருவான்மியூரில், கலாசேத்ரா அருகே ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது.

பெண்கள் மெய்ஞ்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்று வாழ்ந்து காட்டிய மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது. அவர் அந்த சக்தியை பெற ஸ்ரீலலிதா சகரஸ்நாமம்தான் அடித்தளம் அமைத்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News