ஆன்மிகம்

அந்தியூர் குருநாதசாமி கோவிலில் வரும் 3–ந்தேதி முதல் வனபூஜை நடக்கிறது

Published On 2016-07-28 09:10 IST   |   Update On 2016-07-28 09:10:00 IST
அந்தியூர் குருநாதசாமி கோவிலில் வரும் 3–ந்தேதி முதல் வனபூஜை நடக்கிறது
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று அந்தியூர் புதுபாளையத்தில் உள்ள புகழ்மிக்க குருநாதசாமி கோவில் ஆகும்.

காக்கும் காவல் தெய்வமாக விளங்கும் குருநாதசாமி கோவில் ஆடி தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடக்கும்.

அதேபோல் இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா 20–ந்தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி விழாகளைகட்ட தொடங்கியது. விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) கோவிலில் முறைப்படி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருநாதசாமியை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் குருநாதசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவையொட்டி முக்கியமான நிகழ்ச்சிகளாக வன பூஜை நடத்தப்படும். இதில் முதல் வன பூஜை வரும் 3–ந் தேதி நடக்கிறது. அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு குருநாதசாமி மற்றும் காமாட்சி அம்மன் பெருமாள் சாமி தேர்களை பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்து வனக்கோவிலுக்கு கொண்டு செல்வார்கள்.

சாமிகள் எடுத்து செல்லும் வழியில் பக்தர்கள் நெடுஞ்சாணாக கீழே உருண்டு விழுந்து வழிபடுவார்கள்.

வனப்பகுதியை அடைந்ததும் அங்கு சிறப்பு அலங்காரத்துடன் சாமிகளுக்கு விசேச பூஜைகளும் நடைபெறும்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். வரும் 10–ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறும்.

அன்று புகழ் பெற்ற குதிரை மாட்டுச்சந்தை நடைபெறும். 10–ந் தேதி இந்த குதிரை சந்தை தொடங்கி 13–ந்தேதி வரை நடைபெறும்.

குதிரை சந்தைக்கு இந்தியா முழுவதிலிமிருந்தும் பல இனரக குதிரைகள் அந்தியூர் வரும். ரூ.10 ஆயிரத்திலிருந்து 5 லட்ச ரூபாய் வரைக்கும் குதிரைகள் விற்பனை அமோகமாக நடக்கும்.

வரும் 17–ந் தேதி பால் பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

Similar News