ஆன்மிகம்
தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில்

தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில்

Published On 2021-08-06 11:34 IST   |   Update On 2021-08-06 11:34:00 IST
இங்குள்ள இறைவனை வேண்டுபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். அப்படி வேண்டுல் நிறைவேறியவர்கள், சுவாமிக்கும், தாயாருக்கும் புதிய வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோவில், தென்னிந்தியாவில் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்த ஆலயங்களில் ஒன்று. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்...

ஒரிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் வடிவமைப்பை போன்றே, இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம், பலிபீடத்தை தாண்டி சென்றால் 16 தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது. இதன் நடுவில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.

மூலவரான பாண்டுரங்கப் பெருமாள், 12 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சிலை, சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது. அருகே ரகுமாயீ தாயார் வீற்றிருக்கிறார்.

120 அடி உயர கோபுரமும், அதன் மீது 9½ அடி உயரத்தில் தங்கக் கலசமும், அதன் மேலே சுதர்சன சக்கரமும், கொடியும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.

இத்தல பாண்டுரங்கப் பெருமாள், ஞாயிற்றுக்கிழமை மதுராபுரி மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிழமை பாத தரிசனத்திற்காக எளிய அலங்காரத்திலும், வெள்ளி அன்று வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை கல்யாண வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் அருள்பாலிக்கிறார்.

மகாமண்டபத்தில் உள்ள கோவிந்தராஜப் பெருமாள், திருப்பதியைப் போல சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள்கிறார்.

பொதுவாக மூலவர் சன்னிதிக்கு முன்பாக உள்ள துவாரபாலகர்கள், கற்சிலைகளால் செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இங்குள்ள துவாரபாலகர்கள் பஞ்சலோகத்தால் ஆனவர்கள்.

தல விருட்சம் ‘தமால மரம்.’ துவாபர யுகத்தில் இந்த மரத்தின் கீழ் நின்றுதான், கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசைக்கு ராதை உள்ளிட்ட கோபியரும், பசுக்களும் மயங்கியதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

இங்குள்ள இறைவனை வேண்டுபவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். அப்படி வேண்டுல் நிறைவேறியவர்கள், சுவாமிக்கும், தாயாருக்கும் புதிய வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருத்தலம்.

Similar News