ஆன்மிகம்
சூரியன்

சூரியனின் பரிபூரண அருள் வழங்கும் காயத்ரி மந்திரம்

Published On 2020-07-01 06:45 GMT   |   Update On 2020-07-01 06:45 GMT
தினந்தோறும் சூரிய பகவானின் முன்பாக நின்று கொண்டு இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், சூரிய பகவானின் பரிபூரண அருளைப் பெற முடியும்.
நவக்கிரகங்களில் ராஜகிரகமாகவும், நவக்கிரகங்களின் தலைவராகவும் கருதப்படுபவர், சூரிய பகவான். நவக்கிரகங்களின் மையத்தில் இவர் காட்சியளிப்பார். இவரைச் சுற்றிதான் மற்ற கிரகங்கள் காணப்படும். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட பல மந்திரங்கள், துதிகள் என்று இருந்தாலும், விஸ்வாமித்திரரால் உருவாக்கப்பட்ட காயத்ரி மந்திரங்களுக்கு என்று தனியொரு சக்தி இருக்கிறது. அப்படி சூரியனுக்கும் காயத்ரி மந்திரம் உள்ளது. தினந்தோறும் சூரிய பகவானின் முன்பாக நின்று கொண்டு இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், சூரிய பகவானின் பரிபூரண அருளைப் பெற முடியும்.

நவயோகம் என்று சொல்லப்படும் ஒன்பது விதமான யோகங்கள் கைவரப்பெறும் அதிஅற்புத ரகசியத்தைக் கொண்டது இந்த காயத்ரி மந்திரம். இதனை மனதார ஜெபித்து வந்தால், வெற்றி நிச்சயம் என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு.

‘அஸ்வதீ வசாய வித்மஹே

பாஸ ஹஸ்தாய தீமஹி

தந்நஸ் ஸுர்ய ப்ரசோதயாத்’

மேற்கண்ட இது தான் சூரியனுக்கான காயத்ரி மந்திரம். தினமும் பகல் 12 மணி அளவில் கிழக்குப் பக்கமாக அமர்ந்து, இலுப்பை எண்ணெய் அல்லது சுத்தமான நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். கோதுமையை பரப்பி அதன் மேல் எருக்கு இலை வைத்து, அதன்மேல் அந்த தீபத்தை வைக்க வேண்டும். இப்படி தீபம் ஏற்றி சூரியனுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் மலைபோல் வந்த துயரங்கள் பனிபோல் விலகும்.

வெற்றியை அள்ளித்தருபவர் சூரிய பகவான். அவர் பகைவரை வெற்றிகொள்ளக்கூடிய பரிபூரண சக்தி படைத்தவர். நவக்கிரக காயத்ரி மந்திரங்களில், அதிக சக்தி வாய்ந்த இந்த சூரிய மந்திரத்தை ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சூரிய புத்தி நடைபெறுபவர்கள், ஜாகத்தில் சூரியன் பலமிழந்து இருப்பவர்கள், பிதுர் தோஷம் உள்ளவர்கள் என அனைவரும் வழிபாடு செய்யலாம். இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்க வேண்டும்.
Tags:    

Similar News