ஆன்மிகம்
12 ராசி

மாணவர்களின் வெற்றிக்கு உதவும் 12 ராசிகளுக்கான ஸ்லோகங்கள்

Published On 2020-02-11 08:33 GMT   |   Update On 2020-02-11 08:33 GMT
உங்கள் ராசிக்கு வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும் தெய்வ வழிபாட்டையும் செய்து வந்தால், மாணவர்களின் ஒரு வருட உழைப்பு, 100 சதவீதம் நல்ல பலனைத் தரும்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் அரசு பொதுத் தேர்வை நினைத்து, ஜனவரி மாதத்திலேயே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறு பய உணர்வு தோன்ற ஆரம்பித்து விடும். மாணவச் செல்வங்கள், தேர்விற்கு 15 நாட்களுக்கு முன்பே அன்றாட வாழ்வியல், உணவு முறையில் சிறு மாற்றங்கள் செய்தால் உங்களின் ஓராண்டு உழைப்பு பலன் தரும்.

இவற்றோடு உங்கள் ராசிக்கு வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும் தெய்வ வழிபாட்டையும் செய்து வந்தால், உங்களின் ஒரு வருட உழைப்பு, 100 சதவீதம் நல்ல பலனைத் தரும். எந்த ராசிக்காரர்கள், எந்த தெய்வத்தை வழிபட வேண்டும், எந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

மேஷம்

அரசு பொதுத் தேர்விற்காக அயராது படித்த நீங்கள், உங்களுடைய உழைப்பிற்கான முழு பலன் கிடைக்க சரஸ்வதி தேவியை வழிபடுங்கள்.

‘ஓம் வாக்தேவ்யை ச
வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீ
ப்ரசோதயாத்’

என்ற மந்திரத்தை 9 முறை உச்சரித்து, சரஸ்வதியை வழிபட வேண்டும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு.

ரிஷபம்

ஒவ்வொரு நாளும் நீங்கள் திட்டமிட்டு படித்த பாடம், பொதுத் தேர்வு அன்று முழு வெற்றியைத் தர விநாயகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

‘சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே’

என்ற சுலோகத்தை தினமும் 6 முறை பாராயணம் செய்து, விநாயகரை வழிபடுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம்- வெண்மை.

மிதுனம்

உடன்படிக்கும் நண்பர்களுக்கு பாடத்தை புரிய வைக்கும் வல்லமை பெற்ற நீங்கள், பொதுத் தேர்வில் முழு மதிப்பெண் பெற மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது நன்மை தரும்.

‘ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி தந்தோ
விஷ்ணு: ப்ரசோதயாத்’

இந்த மந்திரத்தை தினமும் 5 முறை பாராயணம் செய்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - பச்சை.

கடகம்

‘முயற்சிக்கு முக்கியத்துவம் தந்தால் வெற்றி நமக்கே’ என்ற தாரக மந்திரத்தோடு அயராது படித்த நீங்கள், சாதனை படைக்க வேண்டுமானால் அபிராமி அன்னையை வழிபட வேண்டும்.

‘தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே’

இந்த அபிராமி அந்தாதி பாடலை தினமும் 2 முறை பாராயணம் செய்வதோடு, அபிராமியை வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - வெண்மை.

சிம்மம்

பகவலன் போல் அயராது பரீட்சை எப்பொழுது வரும் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், தினமும் உங்கள் ராசிநாதனான சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள்.

‘ஓம் நமோ ஆதித்யாய..
ஆயுள், ஆரோக்கியம்,
புத்திர் பலம் தேஹிமே சதா!’

என்ற மந்திரத்தை தினமும் காலை வேளையில் சூரிய நமஸ்காரணம் செய்யும் போது பாராயணம் செய்து வாருங்கள். அதோடு ஆதித்ய ஹிருதயம் கேட்பதும் நல்ல பலன் தரும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு.

கன்னி

கண்ணால் காண்பதை, அப்படியே மனதில் பதிய வைக்கும் வல்லமைப் பெற்றவர்கள் நீங்கள். உங்களுடைய இலக்கை அடைவதற்காகவும், நீங்கள் கற்ற கல்வி பல மடங்கு பயன் தரவும் தினமும் ஹயக்ரீவரை வழிபாடு செய்யுங்கள்.

‘ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ
முபாஸ்மஹே’

என்ற மந்திரத்தை தினமும் 5 முறை படித்து ஹயக்ரீவரை வழிபாடு செய்து வந்தால் வெற்றி நிச்சயம். அதிர்ஷ்ட நிறம் - பச்சை.

துலாம்

கல்லூரி படிப்பை லட்சியமாக கொண்டு ஆர்வத்துடன் படிக்கும் நீங்கள், பள்ளியின் அரசு பொதுத் தேர்வில் விரும்பிய மதிப்பெண்களைப் பெற புவனேஸ்வரி அம்மனை வழிபாடு செய்யுங்கள்.

‘ஓம் ஸ்ரீம்
ஹ்ரீம் ஸ்ரீம்
புவனேஸ்வர்யை நமஹ’

என்ற மந்திரத்தை தினமும் 6 முறை பாராயணம் செய்து வந்தால், பெரும் சாதனையை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - வெண்மை.

விருச்சிகம்

போலீஸ், ராணுவம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக விரும்பும் உங்கள் லட்சியம் நிறைவேற, முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள்.

‘சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு’

என்று செவ்வாய் கிரகத்திற்கான பாடலை, தினமும் 9 முறை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் வெற்றிக் கனியை எளிதில் பறிக்கலாம். உங்கள் அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

தனுசு

ஆசிரியருடைய பயிற்சிக்கு ஒத்துழைத்து, உயர் கல்விக்கு அடியெடுத்து வைக்க ஆவலுடன் இருக்கும் நீங்கள், தினமும் குரு பகவானை வழிபாடு செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

‘குணமிகு வியாழ குருபகவானே
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்’

என்ற குரு கவச பாடலை தினமும் மூன்று முறை உச்சரித்து குருவை வணங்கினால், வெற்றிகள் மேலோங்கும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

மகரம்

சனி பகவானை போல் நேர்மையாக, புத்திசாலித்தனத்துடன் படித்து அரசு பொதுத் தேர்வின் வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் நீங்கள், தினமும் ராம பக்தரான ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வாருங்கள்.

‘ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’

என்ற மந்திரத்தை தினமும் 8 முறை பாராயணம் செய்து அனுமனை வழிபாடு செய்து வந்தால், காரியங்கள் வெற்றியாகும். உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் - கருப்பு.

கும்பம்

கோபுர கலசத்தில் இருந்தாலும், தரையில் இருந்தாலும் கும்பத்திற்கு மதிப்புதான். அதேபோல் வாழ்நாள் முழுவதும் மதிப்புடன் வாழ்வதற்கு, நீங்கள் கற்றக் கல்வி பயன் தர வேண்டுமானால், தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வாருங்கள்.

‘கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்’

என்ற மந்திரத்தை தினமும் 8 முறை கூறி வழிபாடு செய்து வந்தால், முன்னேற்றமும், அதிர்ஷ்டமும், வெற்றியும் தேடி வரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் - நீலம்.

மீனம்

சோதனைகளை சாதனைகளாக மாற்றி, வாழ்வில் வெற்றி பெற அல்லும் பகலும் படித்த கல்வி கை கொடுக்க வேண்டுமானால், தினமும் முக்தியடைந்த சித்தர்களை வழிபட வேண்டும்.

‘குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹ;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ’

என்ற குரு மந்திரத்தை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வழிபட்டு வந்தால் வெற்றி வந்து சேரும். உங்கள் அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News